கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதமுடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி மீதான அன்பு குறையவில்லை. மக்களவைத் தேர்தலில் அது தெரியவரும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஜேடிஎஸ் கட்சியின் 4.5 சதவீத வாக்குகள் போயிருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. பாஜகவின் வாக்குகள் குறையவில்லை. பாஜக இதுவரை கர்நாடகத்தில் தனித்து ஆட்சி அமைத்ததில்லை.
எனினும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்திலுள்ள 28 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இது பிரதமர் மீதான மரியாதையையும் நம்பிக்கையையுமே காட்டுகிறது.
கர்நாடகத்தில் 38 ஆண்டுகளாக மீண்டும் ஒரு கட்சி எப்படி ஆட்சி அமைததில்லையோ, அதேபோன்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தோற்ற கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும். இது கர்நாடகத்தில் இருக்கும் ரகசியம் எனக் குறிப்பிட்டார்.