கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று(சனிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து, பெங்களூருவில் கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20, சனிக்கிழமை) பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 2ஆவது முறையாக கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் அவருக்குப் பதவிப் பிரமாணம் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டார். மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட இருவருக்கும் தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள டி.கே.சிவகுமார் இருவருக்கும் எனது வாழ்த்துகள். அவர்களது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளைக் கைப்பற்றி மாநிலத்தில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.