நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநரின் மனைவி மற்றும் அவருடைய 5 வயது மகள் உயிரிழந்தனர். அதே வேழையில் மற்றொரு வாகனமான கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் காயமடைந்தார்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
இகத்புரியிலிருந்து துலேவுக்கு டிரைவர் அப்சல் ரோஷன் அலி ஷேக், அவரது மனைவி மற்றும் அவர்களின் மூன்று மகள்கள் உள்பட ஐந்து பேருடன் ஒரு லாரி சென்று கொண்டிருந்தனர். மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணம்வார் பாலம் அருகே ஷேக் வாகனத்தை நிறுத்தி, தான் ஏற்றிச் சென்ற சரக்குகளை பாதுகாக்கும் கயிறுகளை சரி செய்துள்ளார்.
அப்போது ஷேக்கின் வாகனம் மீது கன்டெய்னர் லாரி ஒன்று மோதியதில், அவரது மனைவி மற்றும் 5 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஷேக், அவரது 7 மற்றும் 1 வயதுடைய மகள்கள் மற்றும் கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் மாவட்ட சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பஞ்சவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.