கரோனாவைவிட கொடிய தொற்று தாக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா பெருந்தொற்று, சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் பரவி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வளா்ந்த நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. கரோனா தொற்றால் உலகம் முழுவதும் 70 லட்சம் மக்கள் உயிரிழந்தனா். இவற்றை கருத்தில் கொண்டு கரோனா பெருந்தொற்றை சா்வதேச மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் 15-ஆவது அவசரநிலை குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் கரோனா பெருந்தொற்றின் அவசர நிலை விலக்கிக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த தொற்றுநோய்க்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும், இது கரோனா தொற்றைவிட ஆபத்தானது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
76வது உலக சுகாதார சபையில் தனது அறிக்கையை சமர்ப்பித்த போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிக்க: தணிந்தது வெப்பம் என வானிலை மையம் அறிவித்த மறுநாளே இப்படியா?
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, கரோனா தொற்று பாதிப்பு குறித்த சுகாதார அவசர நிலை இனி வராது என ட்ரோஸின் அறிக்கை வெளியான நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.