இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறிய நிலையில் அவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 'இந்தியா' கூட்டணி பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தியா கூட்டணி தரப்பில் இதுவரை 3 கூட்டங்கள் நடைபெற்று ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், ‘மத்திய அரசின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி உருவாகியது. ஆனால், தற்போது அந்தக் கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைமைப் பொறுப்பை காங்கிரஸ் ஏற்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், அக்கட்சி 5 மாநில பேரவைத் தோ்தலில் மும்முரமாக உள்ளது. 5 மாநில தோ்தல் முடிந்த பின்புதான் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தைக் கூட்டும் என்று நினைக்கிறேன்' என்று பேசினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் இந்தியா கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதீஷ்குமாரிடம் கார்கே உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மஸோரம் ஆகிய 5 மாநில தோ்லுக்கான வாக்குப்பதிவு நவம்பா் 7-ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.