வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்குத் தீர்வு! 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே முடிவு
ரயில்களில் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்த்து அனைவருக்கும் இருக்கைகள் கிடைக்க, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பயண வசதி, கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் ரயில்கள் போதுமானதாக இல்லை என மக்கள் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதனால், ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியல் நிலையிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் இருக்கின்றன.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்னை? - மருத்துவர்கள் தகவல்
இந்நிலையில் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை உறுதி செய்யும்பொருட்டு இன்னும் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்யும் பொருட்டு அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 3,000 புதிய எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கரோனாவுக்கு முன் 10,186 ரயில்கள் இயக்கப்பட நிலையில் தற்போது நாடு முழுவதும் 10,748 ரயில்கள் இயக்கப்படுவதாகவும் ஆண்டுக்கு 800 கோடி பேர் பயணிக்கும் நிலையில் இது அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக 2027-28 ஆம் ஆண்டில் அனைத்து பயணிகளுக்கும் பயணிப்பதற்கான டிக்கெட் உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும் என்றனர்.