வடகிழக்கு தில்லியில் ஜந்தர் மஸ்தூர் காலனியில் நடைபெற்ற கொடூர கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் (வடகிழக்கு) ஜாய் டிர்கி கூறுகையில்,
நவ.21-ம் தேதி இரவு 18 வயதுடைய இளைஞர் ஒருவர் வெல்கம் பகுதியில் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தோம். ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியை ஆய்வு செய்யும்போது திகிலூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த சிசிடிவில், 18 வயது இளைஞரின் முகம், கழுத்து என கொடூரமாகக் குத்தியுள்ளான் 16 வயது சிறுவன். பின்னர் உடலை இழுத்து வந்து அதனருகே நடனமாடியபடி சுமார் 55 முறைக்கு மேல் குத்தியுள்ளான்.
சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினரை கத்தியைக் காட்டி மிரட்டு இளைஞரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளான்.
சிறுவன் கைது செய்யப்பட்டு, அவனிடம் கொலைக்கான காரணத்தை விசாரித்தபோது, இறந்த இளைஞனுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பிரியாணி வாங்குவதற்காக ரூ.350 பணம் கேட்டு தராததால் கத்தியால் குத்தியதாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கொலைக்கான ஆயுதத்தை போலீஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் குடிபோதையில் இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.