புதுதில்லி: இஸ்ரேலில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு முதல் மீட்பு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை தில்லி வந்தது.
காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.
அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 6 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலில் பாலஸ்தீனத்தின் ‘ஹமாஸ்’ அமைப்பினா் தாக்குதல் நடத்திவரும் போர் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக இஸ்ரேலில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை தில்லி வந்தது.
இதில், 17 மாணவர்கள் உள்பட 21 தமிழர்கள் தில்லி வந்துள்ளனர், அவர்கள் தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.