இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாரதம் என பெயர் மாறுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

இந்தியாவை பாரதம் என மாற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப் படம்)
Updated On :5 செப்டம்பர் 2023, 9:54 am

DIN

இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான தீர்மானத்தை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு முன்மொழியலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி உறுதி செய்ய முடியாத தகவல்கள் பரவிவருகின்றன.

Story image

புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தில்  செப்டம்பர் 18 -  21ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்)  என மாற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரலாம் எனக் கூறப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இதற்கிடையே, ஜி20 மாநாட்டு விருந்தினர்களை அழைப்பதற்கான குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழிலேயே, திரௌபதி முர்மு, பாரத குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது என்ற தகவலை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க அளிக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மைதான் என்பதை இது காட்டுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் இந்தியா) என்பதற்கு மாறாக, பாரத குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1ஐ இப்படித்தான் வாசிக்க வேண்டும் போல, “இந்தியாவாக இருந்த பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று படிக்க வேண்டியது வரும். ஆனால் இப்போது இந்த "மாநிலங்களின் ஒன்றியம்" கூட தாக்குதலுக்கு உள்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில், பாரத குடியரசு -  மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அமுத காலத்தை நோக்கி வீறுநடை போடுகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைப் பார்த்து பயப்படுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மிருத்யுஞ்ஜய் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.