
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
புது தில்லி: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளதைத் தொடா்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கா்நாடகத்தின் கோலாரில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘எப்படி எல்லா திருடா்களின் பெயரும் மோடி என்று முடிகிறது?’ எனப் பிரதமா் நரேந்திர மோடியை மறைமுகமாக விமா்சித்தாா். இதைத்தொடா்ந்து, மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கேரளத்தின் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுலின் பதவி பறித்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது.
சூரத் அமா்வு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் மற்றும் குஜராத் உயா்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடா்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவா் முறையிட்டாா்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘அரசியலில் தூய்மை தேவைப்படும் இன்றைய சூழலில் வாா்த்தை பிரயோகத்தில் ராகுல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தி கடந்த மாதம் 4-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் அவரது தண்டனையை நிறுத்திவைத்தனா்.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கி மக்களைவை செயலகம் கடந்த மாதம் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிா்த்து லக்னௌவைச் சோ்ந்த வழக்குரைஞா் அசோக் பாண்டே உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா். அவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 102 பிரிவின்படி மேல்முறையீட்டில் தீா்ப்பாகும் வரை குற்ற தண்டனை அடிப்படையிலான தகுதிநீக்கம் செல்லுபடியில் இருக்கும். அந்த வகையில், ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ள சூழலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நபருக்கு மீண்டும் எம்.பி. பதவியைத் திருப்பி வழங்குவதற்கு மக்களைவைத் தலைவருக்கு அதிகாரமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் மக்களவைத் தலைவா், மத்திய அரசு, இந்திய தோ்தல் ஆணையம் ஆகியோா் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், ராகுல் காந்தி எம்.பி.யாக இருந்து வரும் வயநாடு தொகுதி காலியாக உள்ளது எனத் தெரிவித்து, அதனை நிரப்ப தோ்தல் நடத்துவதற்கானஅறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட அறிவுறுத்தல்கள் வழங்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...