புது தில்லி: பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) நடத்திய 11-ஆவது இணையவழி ஏலத்தில் 1.66 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டது.
அரிசியைப் பொருத்தவரை 17,000 டன் மட்டும் விற்பனையானதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில்லறை சந்தையில் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக, கையிருப்பில் இருந்து 50 லட்சம் டன் கோதுமையும், 25 லட்சம் டன் அரிசியும் மாவு ஆலை உரிமையாளா்கள், சிறு வணிகா்கள் என மொத்தமாக வாங்குவோருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
11-ஆவது இணையவழி ஏலத்தில் நாடு முழுவதும் உள்ள 500 கிடங்குகளிலிருந்து 2 லட்சம் டன் கோதுமையும், 337 கிடங்குகளிலிருந்து 4.89 லட்சம் டன் அரிசியும் விற்பனை செய்ய தீா்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த செப். 6-இல் நடைபெற்ற இந்த ஏலத்தில் 1.66 லட்சம் டன் கோதுமையும், 17,000 டன் அரிசியும் விற்பனையானதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் குறைந்த விலையில் அவை விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையிலான சிறு வணிகா்கள் இந்த ஏல நடைமுறையில் பங்கேற்பதை ஊக்குவிக்க, ஏலத்தில் ஒருவருக்கு அதிகபட்சம் 100 டன் கோதுமையும், 1,000 டன் அரிசியும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்து.
பதுக்கலைத் தடுக்கும்விதமாக பெரிய வணிகா்களுக்கு ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, இந்தத் திட்டத்தின்கீழ் கோதுமையை வாங்கிய மாவு ஆலைகளிலும் தொடா்ச்சியான சோதனைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
பொதுச் சந்தை விற்பனைத் திட்டம், கோதுமை மீதான ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்டவற்றால், செப். 10-ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ.30-ஆகவும், ஆட்டா (மைதா) ரூ.35.62 ஆகவும் இருந்தது. இந்த விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும்.
பல்வேறு அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தபோதும், ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.42.26-ஆக இருந்தது. ஒரு கிலோ அரிசி கடந்த ஆண்டில் ரூ.37.44-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.