காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு புதிய செயற்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்க உள்ளது. நடப்பாண்டு இறுதியில் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் செயற்குழுவின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 84 பேர் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிக்க | நிபா வைரஸ் கரோனாவை விட ஆபத்தானது: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
நாளையும் செயற்குழுவின் விரிவான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். இதற்கு 159 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் 149 பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காங்கிரஸ் சார்பில் தெலங்கானாவில் பேரணி ஒன்றும் நடைபெற உள்ளது. மேலும் தெலங்கானா தேர்தலில் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகளும் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.