ஒடிசாவில், வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து முறைகேடாக ரூ.1 கோடி அளவுக்கு பணம் மோசடி செய்த வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர் ஸ்வாதிகா ஸ்வைன் (28) உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ரூ.1.04 கோடி மோசடி செய்ததாக குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்கப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற இருவரில், ஒருவர் ஸ்வாதிகாவின் கணவர் மனோஜ் குமார், மற்றொருவர் ஐசிஐசிஐ வங்கி, தேன்கனல் கிளையின் உதவி மேலாளர் பிரசாந்த் குமார் சாஹு என்பது தெரிய வந்துள்ளது.
ஸ்வாதிகா, தனது கணவரின் உதவியோடு, வங்கியில் கணக்கு வைத்திருக்கும், மொபைல் பேங்க், இணையதள வங்கி போன்ற விவரங்களை அறியாத மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது விவரங்களைப் பெற்று, இதில், வங்கி அமைப்புக்குள் சென்று, வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை மாற்றி மோசடி செய்திருக்கிறார்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கரோனா பொதுமுடக்கக் காலத்தைப் பயன்படுத்தி, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு காலத்தில் இந்த மோசடியை நிகழ்த்தியுள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கியின் உள்விவகாரக் குழு நடத்திய விசாரணையில்தான் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, வைப்புத் தொகைகளை ஓடி மூலம் பணம் எடுத்தல், முன்கூட்டியே பணத்தை எடுத்துக்கொள்வது, போன்ற பல மோசடிகளை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
இதில், 11 வாடிக்கையாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டதும், இவர்களுக்கு வங்கி, தாமாக முன்வந்து ரூ.87.54 லட்சத்தை கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதும் தனிக்கதை. இனி வரும் நாள்களில், மேலதிக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வரப்பெறலாம் என்று குற்றப்பிரிவுத் துறை எதிர்பார்க்கிறது.