ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் லோக்தந்த்ரா பச்சாவ்(ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்) போராட்டத்திற்கு பதிலடி அளிக்கும் விதமாக ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தேர்தலுக்கு முன் நீங்கள் எத்தனை கட்சிகளை இணைத்தாலும் மோடி மட்டுமே ஆட்சிக்கு வருவார் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தார்.
இரண்டு நாள் பயணமாக ராஜஸ்தான் சென்றுள்ள அவர், ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சிறைக்குச் செல்வார்கள் என்று ஜோத்பூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அவர் கூறினார்.
நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக ஏற்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர். அடுத்த ஆட்சிக் காலத்தில் இந்தியா மூன்றவாது பெரிய பொருளாதாரமாக மாறும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமை இல்லை. ஏனெனில் அவரது பாட்டி, (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) அவசர காலத்தின்போது லட்சக்கணக்கானோர்களை சிறையில் அடைத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்தும் உத்தரவிட்டார் என்று அவர் கூறினார்.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் கூறிய நிலையில், அமித்ஷா இதற்கு பதிலளித்துள்ளார்.