
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் புதன்கிழமை காலை மேலும் 3 நக்சல்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நக்சல்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில், சுடின்டோலா கிராமத்திற்கு அருகே, ஆயுதம் ஏந்திய நக்சலைட்கள் சிலர் முகாமிட்டுள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன், மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களின் முகாமை கட்சிரோலி போலீசார் முறியடித்து, அங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றினர்.
இதையடுத்து சத்தீஸ்கர் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேந்திரா - கோர்ச்சோலி கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப்.2) காலை 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நக்சல்கள் பகுதியை கண்டறிந்தனர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், நக்சல்கள் பயன்படுத்திய 303 துப்பாக்கி, 12-துளை துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நக்சல்கள் பதுங்கியிருந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்புப் படையினரின் தொடர் தேடுதல் வேட்டையின்போது, துப்பாக்கிச் சூடு நடந்த அடர்ந்த காட்டில் இருந்து புதன்கிழமை காலை மேலும் மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
"இறந்த நக்சல்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் , அவர்கள் மாவோயிஸ்ட்டுகளின் (மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம்) 2 -ஐ சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.
பிஜப்பூர் மாவட்டம் பஸ்தார் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது, இங்கு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.