புது தில்லி: பிரதமர் மோடிக்கு மாற்றாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தருரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, கணக்கச்சிதமான பதிலை அளித்திருக்கிறார்.
நாடாளுமன்ற அமைப்புக்குள், மக்களவைத் தேர்தலின்போது, தனிப்பட்ட ஒரு நபருக்கு அதாவது பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று யார் என்பதை கண்டறிவது அவசியமற்றது என்று சசி தரூர் பதிலளித்துள்ளார்.
புது தில்லியில் செய்தியாளர்களிடையே பேசிய சசி தரூரிடம், பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றாக யாரை நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வி தேவையற்றது என்று மறுப்பு தெரிவித்த சசி தரர், இந்த தேர்தல், ஒரு கட்சியையோ அல்லது கட்சிகளின் கூட்டணியையோ தேர்வு செய்யும் அமைப்புத்தானே தவிர, ஒரு தனிப்பட்ட நபருக்கானது அல்ல என்று பதிலளித்தார்.
ஒரு நாடாளுமன்ற அமைப்புக்குள், தனி ஒருவரின் தேர்வு என்பது தேவையற்றது, நாம் இந்த தேர்தலில் தனி நபர் ஒருவரைத் தேர்வு செய்யப்போவதில்லை. மாறாக, ஒரு கட்சியை அல்லது பல கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியை, அந்தக் கூட்டணி, நம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதை கொள்கையாகக் கொண்டதாக இருக்க வேண்டும், நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.