வடக்கு தில்லியின் திமர்பூர் பகுதியில் தீப்பெட்டி கொடுக்க மறுத்ததற்காக இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சனிக்கிழமை, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். அப்போது ஆட்டோ மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் ரத்த வெள்ளம் இருந்ததை கண்டறிந்தோம்.
கத்தி குத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
அதன்பிறகு, காவல்துறையினர் இந்து ராவ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அறிக்கையை சேகரித்தனர். ஆனால் கத்தி குத்தில் காயமடைந்தவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக 2 சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இரு சிறார்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரிடம் தீப்பெட்டியைக் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் மறுத்திருக்கிறார்.
இதனால் அவர்களுக்கு இடையே சூடான வாக்குவாதங்கள் நடந்திருக்கிறது. இதற்கிடையில், சிறார் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் பாதிக்கப்பட்டவரை தாக்கியுள்ளார். அதன்பிறகு, இரு சிறார்களும் தலைமறைவாகினர். பிடிபட்ட சிறார்களில் ஒருவர் இதற்கு முன்பு கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டது கவனத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.