காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்ட மேடையின் பின்புற பேனரில் பாஜக வேட்பாளரின் புகைப்படம் இடம்பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மண்டலா மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கர் சிங்கை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார்.
இந்த நிலையில், பொதுக் கூட்ட மேடையின் பின்புறத்தில் வைக்கப்பட்ட பேனரில் காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படத்துக்கு மத்தியில் பாஜகவின் மண்டலா வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான ஃபக்கன் சிங் குலாஸ்தே புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, அந்த பேனரின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.
இதையடுத்து தவறுதலாக அச்சடிக்கப்பட்ட குலாஸ்தேவின் புகைப்படத்தை மறைத்து, அதற்கு மேல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்னேஷ் ஹர்வன்ஷ் சிங் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரம்மாண்ட சாலைப் பேரணி நேற்று நடைபெற்ற நிலையில், பாஜகவின் 6 முறை எம்பியான குலாஸ்தேவை எதிர்த்து போட்டியிடும் ஓம்கர் சிங்குக்கு ஆதரவாக ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.