ஆந்திரம் மாநிலத்தில், மருத்துவமனையில் மரணமடைந்த தனது மகனின் உடலை ஏஎஸ்ஆர் மாவட்டத்தில் உள்ள மலை உச்சியில் உள்ள குக்கிராமத்திற்கு சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு அவரது தந்தையே தோளிலேயே சுமந்துச் சென்று அடக்கம் செய்துள்ள அவலம் நடந்தேறியுள்ளது. மகன் மரணமடைந்த வேதனையுடன், அவரது உடலை தந்தை தனது தோளில் சுமந்து செல்லும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.
ஏஎஸ்ஆர் மாவட்டம், ரோம்பில்லி பஞ்சாயத்து மலை உச்சியில் உள்ள சின்னகோனாலா கிராமத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு குண்டூர் மாவட்டம் கொல்லுரு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்காக பழங்குடியினத்தைச் சேர்ந்த சாரா கோட்டய்யா மற்றும் சீதா தம்பதியினர் தங்கள் இரு குழந்தைகளுடன் வந்துள்ளனர்.
இந்த நிலையில், மூன்று வயதான இரண்டாவது குழந்தை ஈஸ்வரனுக்கு திங்கள்கிழமை(ஏப் 8) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பழங்குடியினர் முறைப்படி,குழந்தையை தங்கள் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, செங்கல் சூளை நிர்வாகத்தினர் குழந்தையின் உடலை அவர்களது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.9) ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை புதன்கிழமை(ஏப். 10) ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் விஜயநகரம் மாவட்டம் சின்ன கோனாலா கிராமத்தில் இருந்து 8 கிமீ தொலைவிற்கு முன்பே உள்ள வனிஜா கிராமத்தில் நள்ளிரவில் ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் வேறு வழியின்றி, அந்தத் தம்பதியினர் அந்த கிராமத்தில் விடியும் வரை தங்கியிருந்து, அதிகாலை 5 மணியளவில் தனது 3 வயது குழந்தையின் உடலை இரண்டு மலைகள் வழியாக 8 கி.மீ தூரத்திற்கு தனது தோளில் சுமந்து சென்று மலை உச்சியை அடைந்த அவர்கள் பின்னர் மகனின் இறுதி சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து சிபிஎம் தலைவர் கே. கோவிந்த ராவ், கோணபர்த்தி சிம்ஹாசலம், எஸ் நகுலு ஆகியோர் கூறியதாவது: பழங்குடியின கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாததால் நூற்றுக்கணக்கான பழங்குடியின பழங்குடியின மக்கள் வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
“வேலை தேடிச் செல்லும் பழங்குடியின மக்களை ஒப்பந்தக்காரர்கள் கட்டுமானத் தளங்கள், செங்கல் சூளைகள் மற்றும் பிற துறைகளில் வேலை செய்வதற்கு அழைத்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்வதற்கு முன்பணமாக மொத்தத் தொகையை செலுத்துகிறார்கள். பழங்குடியின மக்கள் ஒப்பந்தம் முடிந்தவுடன் வீடு திரும்புகிறார்கள்,” என்று அவர்கள் கூறினர்.
"மலை உச்சி கிராமத்திற்குச் செல்வதற்கு சாலையுடன் சுற்றுப்பாதை இருந்தாலும், வாகன ஓட்டிகள் வழக்கமாக அதைத் தவிர்த்து மக்களை வனிஜா கிராமத்திலேயே இறக்கிவிடுகிறார்கள், ஏனெனில் இதனால் சுமார் 40 கிமீ மிச்சமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
ஐடிடிஏ பழங்குடியின குடும்பங்களை பணிக்கு அமர்த்தினால், இதுபோன்ற அவல நிலை ஏற்படாது என்றனர். மலையோர கிராமங்களில் சாலை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டின் ஏதாவதொரு பகுதியில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடந்தேறி வரும் நிலையில், என்று மாறும் இந்த அவல நிலை? என்பதே பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது.