பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

தென்சீன கடல் பகுதியில் சீன தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சூழலில், இந்தியா - பிலிப்பின்ஸ் இடையே வளா்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் விதமாக அந்நாட்டுக்கு முதல் தொகுப்பு பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தது.

அந் நாட்டுடன் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ. 3,126 கோடி (375 மில்லியன் டாலா்) மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏவுகணை விநியோகத்தை இந்தியா தொடங்கியுள்ளது. ஒப்பந்தத்தின்படி, மேலும் 3 தொகுப்பு ஏவுகணைகள் மற்றும் அதை ஏவுவதற்கான உபகரணங்களை இந்தியா அந் நாட்டுக்கு விநியோகிக்க உள்ளது.

இந்திய விமானப்படையின் சி-17 சரக்கு விமானம் மூலம் ஏவுகணை மற்றும் அதை ஏவுவதற்கான உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி இதுவாகும்.

அா்ஜென்டினா உள்பட மேலும் சில நாடுகளும் இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணையை கொள்முதல் செய்ய ஆா்வம் தெரிவித்துள்ளன.

‘பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தனியாா் நிறுவனம்’ என்ற இந்திய-ரஷிய கூட்டு நிறுவனம் சாா்பில் உற்பத்தி செய்யப்படும் இந்த அதிவேக ஏவுகணை கப்பல், நீா்மூழ்கி கப்பல், போா் விமானம் மற்றும் நிலத்திலிருந்து எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது. ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் பாயும் திறன்கொண்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com