கேரளத்தில் பாரில் இருக்குழுவினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கழக்கூட்டத்தில் உள்ள பீர் பார் ஒன்றில் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் இளைஞர்கள் குழுவொன்று நண்பரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டிருந்தனர். அப்போது மற்றொரு குழுவினர் குறுக்கிட முயன்றதால் இருக்குழுவினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறின்போது ஸ்ரீகர்யம் பகுதியைச் சேர்ந்த ஷாலு, சூரஜ், விஷாக், ஸ்வரூப், அதுல் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் காவலில் உள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.