மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வயநாட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரியங்கா கலந்துகொண்டு பேசினார்.
பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தின்போது உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண மோடி தலைமையிலான பாஜக அரசு தவறிவிட்டது. மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது.
கடந்த பத்து ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியையும், உண்மையான பிரச்னைகளையும் பிரதமர் மோடி பேசுவதில்லை. மக்களின் வாழ்க்கைக்கு தொடர்பில்லாத புதிய பிரச்னைகளை எழுப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.