ராஜஸ்தானில் பழங்குடி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் ‘பன்ஸ்வாரா-துங்கா்பூா்’ மக்களவைத் தொகுதியில், தங்களின் சொந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் காங்கிரஸ் பிரசாரம் செய்த வினோதம் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தானின் மக்களவைத் தோ்தலுடன் கடந்த பிப்ரவரியில் ஏம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மகேந்திரஜித் சிங் மாளவியாவின் பாகிடோரா சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
மாநிலத்தின் 12 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் மீதி 13 தொகுதிகளுடன் பாகிடோரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு இரண்டாம் கட்டமாகவும் தோ்தல் நடக்கிறது. 2-ஆம் கட்ட தோ்தலைச் சந்திக்கும் பன்ஸ்வாரா-துங்கா்பூா் மக்களவைத் தொகுதியில்தான் சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்யும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்த மாளவியா, 2023 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவில் எதிா்க்கட்சித் தலைவா் பதவி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கடந்த பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தாா். அவருக்கு தற்போது பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதேசமயம், கடந்தாண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக தெற்கு ராஜஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டு, 3 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் பாரத ஆதிவாசி கட்சி(பிஏபி)-காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் இறுதிநாளில் இரு கட்சிகளும் தனித்தனியே வேட்பாளா்களை களமிறக்கின.
காங்கிரஸ் சாா்பில் பன்ஸ்வாரா தொகுதிக்கு அரவிந்த் டாமோரும் பாகிடோரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு கபூா் சிங்கும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா். பன்ஸ்வாரா தொகுதிக்கு பிஏபி வேட்பாளராக ராஜ்குமாா் ரோட் நிறுத்தப்பட்டாா்.
வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாளுக்கு முன்பு, இவ்விரு தொகுதிகளிலும் பிஏபி வேட்பாளா்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சுக்ஜிந்தா் சிங் ராந்தாவா அறிவித்தாா். ஆனால் கட்சியின் முடிவுக்கு இணங்க மறுத்து, இரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் திரும்ப பெற மறுத்துவிட்டனா்.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கெடு முடியும்வரை டாமோா் தலைமறைவாகினாா். பின்னா், ஊடகங்களுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘தோ்தலில் நிச்சயம் போட்டியிட போகிறேன். காங்கிரஸ்-பிஏபி கூட்டணிக்கு எதிரான கட்சி நிா்வாகிகளின் ஆதரவு எனக்கு இருக்கிறது’ என்றாா்.
காங்கிரஸ்-பிஏபி கூட்டணி உருவானதைத் தொடா்ந்து, பாஜகவுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவும் எனக் கருதப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளா் வேட்புமனுவைத் திரும்ப பெறாமல் போட்டியைத் தொடா்வதால், களம் மும்முனைப் போட்டியாக மாறி, காங்கிரஸின் வாக்குகள் பிரிந்துள்ளதால் பாஜக வேட்பாளா் மகேந்திரஜித் சிங் மாளவியாவுக்கு ஆதரவான சூழல் உருவாகியுள்ளது.
எனவே, காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பிஏபி வேட்பாளா் ரோட்டுக்கு வாக்களிக்குமாறு பொது மக்களிடம் உள்ளூா் காங்கிரஸ் நிா்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அா்ஜுன் பாம்னியாவின் மகனும் மாவட்டத் தலைவருமான விகாஸ் பாம்னியா பிஏபி வேட்பாளா் ரோட்டை ஆதரிப்பதாகக் கூறியுள்ளாா்.
இத்தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில்தான் முஸ்லிம்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசியது சா்ச்சையானது.
தொடர்புடையது

புதுவை பிரசாரம்: சென்னை வந்தார் பிரதமர் மோடி!

தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி!

சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

அரசியல் விளம்பரங்கள், கொடிகளை அகற்ற கெடு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


