உத்தரப்பிரதேச மாநில அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 98.50 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார் பிராசி நிகம். ஆனால், அவரது சாதனைக்காக அல்லாமல், அவரது முகத்தில் வளர்ந்திருக்கும் மீசை முடிகளால் சமூக வலைத்தளங்களில் விமரிசிக்கப்படுவதை நினைத்து அவர் வருத்தம் அடைந்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தான் மிகவும் கஷ்டப்பட்டு படித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறேன். ஆனால், எனது புகைப்படம் செய்திகளில் வெளியான போது, எனது சாதனையைப் பற்றி பேசாமல், எனது தோற்றம் குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் 1 அல்லது 2 மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தால் இந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் எனது புகைப்படம் பரவியிருக்காது. எனது தோற்றத்துக்காக பலரும் விமரிசிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்காகவே நான் மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என்று நினைத்தேன் என்கிறார் வருத்தத்துடன்.
எனக்கு அது வருத்தத்தை அளித்தது, ஆனால், சமூக வலைத்தளங்களல் மக்கள் என்ன நினைத்தாலும் அதை சொல்வார்கள். அவர்களை எங்கேயும் தடுத்து நிறுத்த முடியாது என்கிறார் நம்பிக்கையை இழந்தவராக.
தோற்றம் குறித்து கேலி செய்து வெளியான பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து, இந்தப் பெண் முன், ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம், ஒருசிறந்த தருணம், மக்களால் வலி நிறைந்ததாகிவிட்டது என்றும், சமூக வலைத்தளம் நஞ்சைப் போன்று கொடியது என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.