பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

பிண்ட்: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைக் கிழித்து தூக்கியெறிந்து விடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம், பிண்ட் நகரில் காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் சாசனப் புத்தகத்தின் ஒரு பிரதியை கையில் ஏந்தியவாறு ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தல் ஒரு சாதாரணமான தேர்தல் அல்ல; இது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராகும். ஏழைகள், பட்டியல் இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் அரசியல்சாசனத்தால்தான் பல்வேறு உரிமைகளைப் பெறுகின்றனர்.

மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நில உரிமைகள், இடஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களையும் அரசியல் சாசனம்தான் அளிக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைக் கிழித்து தூக்கியெறிந்து விடும்.

தாங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியல் சாசனப் புத்தகத்தைக் கிழித்து தூக்கியெறிவது என்று பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவர்களின் எம்.பி.க்கள் ஆகியோர் உத்தேசித்துள்ளனர். அப்புத்தகத்தைத் தூக்கி எறிவது என்றும் 20-25 கோடீஸ்வரர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும் என்றும் பாஜக விரும்புகிறது.

மத்திய ஆளுங்கட்சி (பாஜக) இடஒதுக்கீட்டுக்கு எதிராக இல்லை என்றால் அது ஏன் பொதுத்துறை நிறுவனங்களையும் ரயில்வேயையும் தனியார்மயமாக்குகிறது?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தனது மகாலட்சுமி திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண் லட்சாதிபதிகளை உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ் அரசு பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1 லட்சத்தை (மாதத்துக்கு ரூ. 8,500) அரசு செலுத்தும்.

22 முதல் 25 தொழிலதிபர்களை பிரதமர் மோடி கோடீஸ்வரர்களாக்கினால், கோடிக்கணக்கான பெண்களை காங்கிரஸ் லட்சாதிபதிகளாக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com