
இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது ரூ.32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீஸை கர்நாடக மாநில வரித்துறை திரும்பப் பெற்றுள்ளது.
மேலும், மத்திய ஜிஎஸ்டி புலனாய்வு அமைப்பை தொடர்புகொண்டு விளக்கம் பெறுமாறு இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு கர்நாடக மாநில வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறுகையில், கர்நாடக மாநில அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது, நோட்டீஸ் திரும்பப் பெறப்படுவதாகவும், இது தொடர்பாக மத்திய ஜிஎஸ்டி புலனாய்வு அமைப்பை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி தொடர்பான சிக்கல்களை விசாரணை நடத்தும் அமைப்பாக மத்திய ஜிஎஸ்டி புலனாய்வு அமைப்பு உள்ளது.
முன்னதாக இது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளிநாடுகளில் கிளைகளை நிறுவி அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ஜூலை 2017 முதல் 2021-2022 வரையிலான காலகட்டத்தில், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி(ஐஜிஎஸ்டி) மூலம் ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாக ஜிஎஸ்டி இயக்குநரகம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு சேவைகளைப் பெற்று பயனடைந்துள்ள இன்ஃபோசிஸ் லிமிடட் பெங்களூரு நிறுவனம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்தத் தவறிவிட்டதாகவும் புகாரில் கூறப்பட்டது.
இவ்விவகாரத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ் குறித்து அந்நிறுவனம் அளித்த விளக்கத்தில், ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, வெளிநாட்டு கிளை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள சேவைகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது எனவும், தங்கள் நிறுவனங்களின் மேற்கண்ட செலவினங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நோட்டீஸ் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.