
ஆகஸ்ட் 6-ஆம் தேதி, வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலைப் பகுதிகளில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த நாள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இடுக்கி மாவட்டம் மூணாறில் நடந்த நிலச்சரிவின் நினைவு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 78 போ், அவா்களது உறவினா்கள் 4 போ் என மொத்தம் 82 போ் சிக்கினா். இவர்களில் 66 பேர் பலியாகினர். 11 பேர் மீட்கப்பட்டனர். 4 பேர் இன்னமும் காணாமல் போனவர் பட்டியலில் உள்ளனர்.
அதாவது, கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் குடும்பங்களும் தங்கியிருந்த பகுதிகளில் கடும் நிலச்சரிவு நேரிட்டது, கடுமையான நிலச்சரிவின்போது, மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த ராஜமலை எஸ்டேட் முழுக்க அடித்துச்செல்லப்பட்டது.
ராஜமலை எஸ்டேட் முழுக்க நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து இரண்டு பேர் மட்டும் தப்பி, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போதுதான், தொழிலாளர் குடும்பங்களுக்கு நடந்த துயரமே வெளி உலகுக்குத் தெரிய வந்தது.
கிட்டத்தட்ட 28 நாள்கள் தேடுதல் பணி நடைபெற்றது, மண்ணுக்குள் இருந்து 11 பேர் மீட்கப்பட்டனர். 66 பேர் பலியாகினர். நான்கு பேர் இன்னமும் கிடைக்கவில்லை.
பலியானவர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. ஆறு மாதங்களில் நிவாரணப் பணிகளும் தொடங்கின.
இந்த மிக பயங்கர நிலச்சரிவின் நினைவு நாள் இன்று மூணாறு பெட்டிமுடி பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கைப் பகுதிகளில் நிலச்சரிவால் அடித்துச்செல்லப்பட்ட உடல்களை தேடும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.