

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா 17 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து இன்று மாலை வெளியே வந்தார்.
அப்போது சிறைக்கு வெளியே குவிந்திருந்த தொண்டர்களுடன் அமைச்சர் அதிஷி, சஞ்சய் சிங் எம்.பி. உள்ளிட்டோரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வெளியே வந்த அவர், அரசியலமைப்பின் அதிகாரம் மற்றும் ஜனநாயகத்தினால் தான் ஜாமீன் பெற்றதாகவும், அதே அதிகாரம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் விடுதலையை உறுதி செய்யும் என்றும் கூறினார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் வழங்கியிருக்கிறது.
மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது திரும்பப்பெறப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 10 லட்சம் செலுத்துவதோடு, தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.