
ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கி, இந்தியத் தனியார் நிறுவனங்களின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பார்க்லேஸ் - ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மிகவும் மதிப்புமிக்க வணிகக் குழுமங்களின் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையிலான அம்பானி குழுமம்தான், ரூ. 25.75 லட்சம் கோடி மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் என்று கூறப்படுகிறது.
இரண்டாவது இடத்தில், ரூ. 7.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் நீரஜ் பஜாஜ் தலைமையிலான பஜாஜ் குழுமமும், ரூ. 5.39 லட்சம் கோடி மதிப்புடன் பிர்லா குழுமம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் மதிப்பானது, கிட்டத்தட்ட சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூ. 38.27 லட்சம் கோடிக்கு சமமான மதிப்பீட்டைக் கொண்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது.
அவர்களுக்கு அடுத்ததாக, ரூ. 4.71 லட்சம் கோடி மதிப்பில் ஜிண்டால் குழுமம் 4 ஆவது இடத்திலும், ரூ. 4.30 லட்சம் கோடி மதிப்புடன் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா தலைமையிலான நாடார்கள் குழுமம் 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும், முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே பெண்ணாக, நாடார்கள் குழுமத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா வலம் வருகிறார்.
இவர்களைத் தொடர்ந்து, மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் 6 ஆவதாகவும், ஆசிய பெயிண்ட்ஸ் குழுமம் 7 ஆவதாகவும், வகில் குழுமம் 8 ஆவதாகவும், ராஜீவ் சிங் தலைமையிலான டிஎல்எஃப் குழுமம் 9 ஆவதாகவும், முருகுப்பா குழுமம் 10 ஆவது இடத்திலும் உள்ளன.
அடுத்ததாக, முதல் தலைமுறைப் பட்டியலில், கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலிடத்தைப் பிடித்தார். ரூ. 2.37 லட்சம் கோடியுடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இரண்டாவது இடத்திலும், ரூ. 91,200 கோடி மதிப்புடன் மருந்து நிறுவனமான திவி குழுமம் 3 ஆவது இடத்திலும் உள்ளது.
மேலும், தொழில்துறைத் தயாரிப்புகள் துறையில் 28 நிறுவனங்கள் ரூ. 4,58,700 கோடி மதிப்பிலும், ஆட்டோமொபைல் துறையில் 23 நிறுவனங்கள் ரூ. 18,76,200 கோடி மற்றும் மருந்துகள் துறையில் 22 நிறுவனங்கள் ரூ. 7,88,500 கோடி மதிப்பிலும் உள்ளன.
இந்த வணிகங்கள் இந்தியாவின் உலகளாவிய போட்டித்திறன் மற்றும் பொருளாதாரப் பின்னடைவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பார்க்லேஸ் தனியார் வங்கியின் தலைவர் நிதின் சிங் கூறுகையில், "இந்தியா ஒரு சிக்கலான நாடு; இந்தியா பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு விஷயங்களால் ஆனது.
இந்த சிக்கலான சூழலில் எப்படி வேலை செய்வது? என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே, தகுந்த வெகுமதி கிடைக்கிறது.
இந்த சிக்கலான சூழலில் பணியாற்றுவதால்தான், அவர்களால் செழிக்க முடிந்தது" என்று தெரிவிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.