
கேரளத்தில் நிலச்சரிவு பாதிப்பை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தார்.
கடந்த ஜூலை 29-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலச்சரிவு வயநாட்டையே புரட்டிப்போட்டது. எண்ணற்ற பாதிப்பும், பலியும் பதிவானது. 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 153 பேர் இடிபாடுகளில் சிக்கி மண்ணோடு புதையுண்டனர், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கேரளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட 11 நாள்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி.
கேரளத்தின் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆரிஃப், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உயர் அரசு அதிகாரிகளும் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் கல்பெட்டாவுக்கு சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகச் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
பின்னர், சுமார் 10,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு பகுதிகளில் நடைபெறும் மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்கிறார்.
வயநாடு நிலச்சரிவைத் தேசியப் பேரிடராக அறிவிப்பதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான விரிவான தொகுப்புக்கு ஒப்புதல் அளிப்பதிலும் பிரதமரின் வருகை முக்கியமானதாக இருக்கும் என்று கேரள அரசு நம்புகிறது.
பேரழிவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கும், மறுவாழ்வு மற்றும் நகரத் திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்து உதவி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.