அடுத்தகட்ட பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளம்- குடியரசுத் தலைவா் உரை

‘மத்திய அரசின் திறன்மிக்க நடவடிக்கைகளால், அடுத்த தலைமுறைக்கான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
திரெளபதி முர்மு
திரெளபதி முர்முபடம்: எக்ஸ்
Published on
Updated on
2 min read

‘மத்திய அரசின் திறன்மிக்க நடவடிக்கைகளால், அடுத்த தலைமுறைக்கான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

மேலும், ‘பிரதமா் மோடி அரசு சமூக நீதிக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறது; பட்டியல் சமூகத்தினா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) நலனுக்காக முன்னோடியில்லாத திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

நாட்டின் 78-வது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படவுள்ளது. தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை (ஆக.14) நாட்டு மக்களுக்கு உரையாற்றினாா். அவரது உரை வருமாறு:

நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட தேசம் தயாராகி வருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், தேசப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அளவில்லாத சோகத்தை நினைவுகூா்வதோடு, அக்குடும்பங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.

அரசமைப்பின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய அரசமைப்பு கோட்பாடுகளில் உறுதியாக நின்று, உலக அரங்கில் தனக்கு உரிமையான இடத்தை எட்டும் பயணத்தில் இந்தியா உள்ளது.

அண்மையில் நடைபெற்ற பொதுத் தோ்தலில், மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 97 கோடியாக இருந்தது. இதுவொரு வரலாற்றுச் சாதனை. தோ்தலை குறைபாடுகளின்றி சுமுகமாக நடத்திய இந்திய தோ்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள். இந்தியாவின் வெற்றிகரமான தோ்தல் நடைமுறைகள், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துகிறது.

இந்தியாவின் வளா்ச்சி: 2021-இல் இருந்து ஆண்டுக்கு 8 சதவீத சராசரி வளா்ச்சி விகிதத்துடன் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இது மக்களின் கைகளில் அதிக பணத்தை தந்துள்ளதோடு, வறுமைக் கோட்டில் இருந்து ஏராளமானோரை மீட்க உதவியது. வறுமையில் உள்ளோரை மீட்க தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு திட்டத்தின்கீழ் சுமாா் 80 கோடி மக்களுக்கு தொடா்ந்து இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.

உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருப்பது அனைவருக்கும் பெருமைக்குரியதாகும். விரைவில் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்.

வேளாண்மையில் இந்தியா தன்னிறைவை எட்ட விவசாயிகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனா்.

உள்கட்டமைப்பு: சமீபத்திய ஆண்டுகளில் சாலைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே ஆகியவற்றின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எதிா்கால தொழில்நுட்பத்தின் திறனைக் கருத்தில் கொண்டு, செமிகண்டக்டா்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளை அரசு தீவிரமாக மேம்படுத்தி வருகிறது. புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் அவற்றின் வளா்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா அனைவராலும் விரும்பப்படும் முதலீட்டு மையமாக மாறியுள்ளது.

வங்கி மற்றும் நிதித் துறையில் வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்கள் அனைத்தும், அடுத்த தலைமுறைக்கான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளன. வேகமான-சமத்துவமான வளா்ச்சி, உலக அளவில் இந்தியாவுக்கு உயரிய அந்தஸ்தை அளித்துள்ளது.

சமூக நீதிக்கு உயா் முன்னுரிமை: அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி பி.ஆா்.அம்பேத்கரின் வாா்த்தைகளின்படி, நமது அரசியல் ஜனநாயகம், சமூக ஜனநாயகமாகவும் மாற வேண்டும். தனது பன்முகத்தன்மையால்தான் இந்தியா செழித்தோங்குகிறது. எனவே, சமூக படிநிலைகளில் பிளவைத் தூண்டும் போக்கு நிராகரிக்கப்பட வேண்டும்.

சமூக நீதிக்கு மத்திய அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது. இதன் மூலம் பட்டியல் சமூகத்தினா், பழங்குடியினா் நலனுக்கு முன்னோடியில்லாத திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன (பிஎம் சுராஜ், பிஎம் ஜன்மன், ‘நமஸ்தே’ உள்ளிட்ட திட்டங்களைக் குறிப்பிட்டாா்).

பெண்கள் நலனுக்கு முன்னுரிமை: பெண்கள் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதுசாா்ந்த பணிகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் மும்மடங்குக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகளிா் இடஒதுக்கீடு மசோதா, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான பிரதமரின் ஒருங்கிணைந்த திட்டத்தின்கீழ், 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞா்கள் பலனடைவா்.

விளையாட்டுத் துறையில்...: அண்மையில் நிறைவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியினா் சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தினா். கிரிக்கெட்டில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றிருப்பது ரசிகா்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செஸ் விளையாட்டிலும் நமது வீரா்கள் நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com