92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சம்பவத்தன்று என்ன நடந்தது? கொல்கத்தா மருத்துவரின் தாய் விளக்கம்!

சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து கொல்கத்தா பெண் மருத்துவரின் தாய் விளக்கம் அளித்துள்ளார்.

News image

கொல்கத்தா கொடூரம்

Center-Center-Delhi

Updated On :19 ஆகஸ்ட் 2024, 9:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரான தனது மகள் முதலில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார்கள், ஆனால், உடலைப் பார்த்ததும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நாங்கள் கூறினோம் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை அவரது தாய் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது தாய் வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தாய் கூறுகையில், முதலில், எங்களுக்கு மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, அதில், பேசியவர், உங்கள் மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

உடனடியாக அழைப்பு வந்த எண்ணுக்கு நாங்கள் தொடர்பு கொண்டு என்ன ஆனது என்று கேட்டோம், அதற்கு அவர்களோ, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறி மீண்டும் அழைப்பை துண்டித்துவிட்டனர். பிறகு மீண்டும் நாங்கள் அழைத்தபோது, பேசியவர் உதவி கண்காணிப்பாளர் என்றும், உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறினார்.

எங்கள் மகள் வியாழக்கிழமை இரவு பணிக்குச் சென்றார். வெள்ளிக்கிழமை இரவு 10.53 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். ஆனால், எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மகளைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. நள்ளிரவு 3 மணிக்குத்தான் உள்ளே அனுமதித்தார்கள். அப்போது அவரது உடலில் ஒரே ஒரு துணி மட்டுமே இருந்தது. கை உடைக்கப்பட்டிருந்தது, கண் மற்றும் வாயிலிருந்து ரத்தம் வந்திருந்தது என்றார் அழுதபடி.

மகளைப் பார்த்ததுமே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், அங்கிருந்தவர்களிடமும், அவர் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறினோம், எங்கள் மகளை டாக்டராக்க நாங்கள் எவ்வளவோ பாடுபட்டோம், ஆனால் இப்போது அவளை கொலை செய்துவிட்டார்கள் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த வழக்கு விசாரணையின் தொடக்கத்திலிருந்தே எங்களுக்கு அதிருப்திதான், இதில் ஒருவர் அல்ல ஒன்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்கிறோம் என்கிறார்.

முதல்வர் மம்தா தொலைபேசி மூலம் பேசினார், உண்மையான குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்படுவார் என்று கூறியிருந்தார், ஆனால், அவர் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை, ஒருவர் மட்டுமே கைதாகியிருக்கிறார். நாங்கள் நிச்சயமாக சொல்கிறோம், இதில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பிருக்கிறது, ஒட்டுமொத்த துறையுமே இதற்குப் பொறுப்பு. இதில் காவல்துறை சிறப்பாக செயல்படவில்லை. போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றுதான் முதல்வர் நினைக்கிறார் என்றும் அவரதுதாய் தெரிவித்துள்ளார்.

எனது மகளின் உடல் கூறாய்வை முடித்து எவ்வளவு விரைவாக அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடியுமோ அதில்தான் பல அதிகாரிகளும் குறியாக இருந்தார்கள் என்றார்.

இது பற்றி பேசிய பெண்ணின் தந்தை, ஒரு மகளை இழந்துவிட்டேன், லட்சக்கணக்கான பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதே வேளையில், எனது மகளின் மோசமான புகைப்படங்களைப் பகிர்ந்து தவறான தகவல்களையும் சிலர் பரப்புகிறார்கள். அது வேதனையை அளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.