
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், எல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிபிஐ தரப்பில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
தொடர்ந்து, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பவம் நடந்து ஐந்தாவது நாளில்தான் விசாரணைக்குள் சிபிஐ நுழைகிறது, அதற்குள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும், கொல்கத்தா காவல்துறையின் நாள் குறிப்பில், இந்த சம்பவம் காலை 10.10க்கு பதிவாகியிருக்கிறது, ஆனால், குற்றச் சம்பவம் நடந்த இடம் 11.30 மணிக்குத்தான் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இது மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் துஷார் மேத்தா கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மேற்கு வங்க மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபலிடம், உடல் கூறாய்வு எப்போது செய்யப்பட்டது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, உடல் கூறாய்வு மாலை 6.10 மணி முதல் இரவு 7.10 மணி வரை நடைபெற்றதாகக் கூறினார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட வாதங்களின் அடிப்படையில், ஒரு குற்றவியல் வழக்கு விசாரணையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை கொல்கத்தா காவல்துறை பின்பற்றவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் கவனித்திருப்பதாகப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.