
சத்ரபதி சிவாஜி சிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுப்பணித் துறை பொறியாளர் முன்பே எச்சரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
துருப்பிடித்த நட்டு, போல்டுகள் மூலம் சிலை இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என கடற்படைக்கு பொறியாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2023 டிசம்பர் 23ஆம் தேதி கடற்படை தினத்தின்போது சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
இந்த சிலை அமைக்கப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில், தற்போது விழுந்து நொறுங்கியுள்ளது. சிலை விழுந்து உடைந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் பலரால் பகிரப்பட்டது. பாஜக ஆட்சியில் கட்டுமானத் துறை, பொதுப்பணித் துறையில் ஊழல் நிறைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
இந்நிலையில், சிவாஜி சிலை ஆபத்தான நிலையில் இருந்ததாக முன்பே (ஆக. 20) பொறியாளர் ஒருவர் கடற்படையை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில், கடற்படை தினத்தில் 2023-ல் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆபத்தான நிலையில் உள்ளது. சிற்பி ஜேதீப் ஆப்தே ஜூன் மாதம் சிலையை சரிபார்த்தார். இருந்தபோதும் தற்போது சிலையின் இணைப்பில் உள்ள நட்டு, போல்டுகள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. கடற்கரையையொட்டிய உப்புக் காற்று மற்றும் மழை காரணமாக இருப்பு போல்டுகள் துருப்பிடித்துள்ளன.
சத்ரபதி சிவாஜி சிலையின் நிலை குறித்து, உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.