உடைந்த இடத்தில்... சத்ரபதி சிவாஜிக்கு 100 அடி சிலை?

சத்ரபதி சிவாஜியின் சிலை உயரம் 28 அடியாக இருந்தது. தற்போது 100 அடி உயரத்தில் சிலை வைக்க திட்டமிடப்படுகிறது.
சத்ரபதி சிவாஜி சிலை: உடைவதற்கு முன்பு - உடைந்த பின்பு
சத்ரபதி சிவாஜி சிலை: உடைவதற்கு முன்பு - உடைந்த பின்புபடம்: எக்ஸ்
Published on
Updated on
2 min read

சிவாஜி சிலை விழுந்து உடைந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் இன்று (ஆக. 27) கேட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள சத்ரபதி சிவாஜியின் 28 அடி உயர பிரமாண்ட சிலை நேற்று (ஆக. 26) உடைந்து தரைமட்டமானது.

கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலையைத் திறந்துவைத்த நிலையில், 8 மாதங்களில் சிலை உடைந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் காற்றுடன் கூடிய கனமழை இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் சிலை உடைந்ததற்காக காரணங்கள் குறித்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

உடைந்து தரைமட்டமான சத்ரபதி சிவாஜி சிலை
உடைந்து தரைமட்டமான சத்ரபதி சிவாஜி சிலை படம்: எக்ஸ்

சிலை உடைந்தது குறித்து பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்,

''சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சோகமான சம்பவம். இதில் அரசியல் விளையாட்டு வேண்டாம். சிலையை அமைக்கும் போது காற்றின் ஓட்டத்தை சிற்பி புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். கடற்படை உதவியுடன் இதே இடத்தில் புதிய சிலையை நாங்கள் அமைப்போம்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு சிலை உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டது. சத்ரபதி சிவாஜியின் படையைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு புகைப்படம் எடுக்கமாட்டார்கள். அவர்கள் சத்ரபதி சிவாஜியின் ஆற்றலாக செயல்படுபவர்கள். எத்தனை அப்சல் கானா (சுல்தான் அரசர்) போக்குகள் தொடர்ந்தாலும் அவற்றை ஜனநாயக ரீதியில் முறியடிப்போம்'' என பட்னவீஸ் குறிப்பிட்டார்.

சத்ரபதி சிவாஜி சிலையை நிறுவியது இந்திய கடற்படைதான் என்றும், மாநில அரசு அல்ல எனவும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது, ''சிலை உடைந்து விழுந்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராதது. துரதிருஷ்டவசமானது. ஆனால் இதில் ஒரு நன்மையும் நடந்துள்ளது. சத்ரபதி சிவாஜியின் சிலை உயரம் 28 அடியாக இருந்தது. இப்பகுதியில் உள்ள மக்கள் இதனை 100 அடியாக வைத்திருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இங்கு 100 அடி உயர சிலை வைக்கப்பட்டால், அது எங்கள் அனைவருக்கும் பெருமை மிகுந்த தருணமாகும். இது குறித்த முயற்சிகளை முன்னெடுப்போம். இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸிடம் தெரிவிப்போம்.

பாபாசாகேப் அம்பேத்கருக்கு மாநில அரசு சார்பில் சிலை வைத்தோம். அதைவிடப் பெரிதாக சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

சத்ரபதி சிவாஜி சிலையின் பாகங்களை இணைக்க பயன்படுத்தப்பட்ட போல்டுகள் துருப்பிடித்துவிட்டதாக பொறியாளர் முன்பே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com