
சிறு வயதில் பிரதமர் மோடி தொடங்கிய வங்கிக் கணக்கு மூடப்பட்டது ஏன்? என 'மோடி ஆர்ச்சிவ்ஸ்' எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆக. 28 ஆம் தேதி தொடக்கிவைத்தார்.
அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, மலிவு விலையில் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு அனைவரும் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கும் திட்டமாக இருக்கிறது. இத்திட்டம் தொடங்கி இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்த 10 ஆண்டுகளில் 53 கோடிக்கும் அதிகமானோர் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளதாகவும் மொத்தம் ரூ. 23.12 லட்சம் கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, 'வரலாற்று நாள் இன்று. ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு நாளில் அனைத்து பயனாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திட்டம் வெற்றியடைய இரவு, பகலாக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
இது கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக ஏழை சகோதர, சகோதரிகளுக்கு பொருளாதார ரீதியாக வலுவூட்டும், கண்ணியத்துடன் அவர்கள் வாழ வாய்ப்பளிக்கும் வெற்றிகரமான திட்டமாக உள்ளது' என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், 'மோடி ஆர்ச்சிவ்ஸ்' எக்ஸ் பக்கத்தில் கடந்த 2014-ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது பிரதமர் மோடி கூறிய கதை ஒன்று விடியோவாக பகிரப்பட்டுள்ளது.
"50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவர், சேமிப்பின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டு ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கினார். அது பிற்காலத்தில் அவருக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையால், அவர் வளர்ந்த பிறகும் அவரது வங்கிக்கணக்கில் பணம் போட முடியவில்லை. பல ஆண்டுகளாக தனது வங்கிக் கணக்கை காலியாகவே வைத்திருந்தார். இதனால், பயன்படுத்தப்படாத கணக்கை முடக்குவதற்கு அதிகாரிகள் முயற்சித்தனர். வங்கிக்கு உள்ள சிரமத்தை கருத்தில்கொண்டு அவரே அந்த வங்கிக் கணக்கை மூடிவிட்டார்.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல, நான்(பிரதமர் நரேந்திர மோடி)தான்.
அப்போது வங்கிக் கணக்கை மூடுவதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இன்று அனைவருக்கும் வங்கிக் கணக்குத் தொடங்குவதில்தான் எங்களது முயற்சிகள் உள்ளன.
இந்த முயற்சிகள் வறுமையில் வாடும் மக்களின் வாழ்வில் ஒளியைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்' என்று பேசியுள்ளார்.
அப்போது பிரதமரின் வங்கிக்கணக்கு மூடப்பட்ட நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய திட்டத்தினால் கோடிக்கணக்கான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. வறுமை, மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்டவரால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.