
நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்புகிறேன் என தில்லி கலால் கொள்கை வழக்கில் சிறையிலிருந்து வெளியான பிஆர்எஸ் எம்எல்சியான கவிதா கூறியுள்ளார்.
தில்லியில் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வழிவகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்றதாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையாலும், பின்னர் ஏப்ரலில் சிபிஐயாலும் கைது செய்யப்பட்டார் கவிதா.
பின்னர், பல முறை கவிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. எனவே, அவரை விசாரணைக்காக காவலில் வைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் நேற்று (27.7.24) தீர்ப்பளித்தது.
இதையடுத்து, கடந்த 5 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதா நேற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை அவரது கணவர், மகன் மற்றும் பிஆர்எஸ் உறுப்பினர்கள் வரவேற்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா கூறுகையில்,
நீதிக்காக நிச்சயம் போராடுவோம். "நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்" நாங்கள் நிச்சயமாகப் போராடுவோம். உறுதியை இழக்கமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை உண்மையாக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் மிகவும் போராடியதாகவும், ஆனால் நீதி வென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.