
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் பாரட்டும் விதமாக சிவசேனை (யுபிடி) கட்சியின் தலைவர் பதிவிட்டதால் சமாஜ்வாதி கட்சி மகா விகாஸ் அகாடி கூட்டணியை விட்டு வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு நேற்றுடன் (டிச. 6) 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட சிவசேனை (யுபிடி) கட்சியின் சட்ட மேலவை உறுப்பினரும், உத்தவ் தாக்கரேயின் உதவியாளருமான மிலிந்த் நர்வேகர் ”இதைச் செய்தவர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டு பால் தாக்கரே படத்துடன் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரே படங்களும் இருந்தன.
மகாராஷ்டிர சமாஜ்வாதி கட்சித் தலைவரான அபு அஸ்மி இது தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், “சிவசேனை (யுபிடி) கட்சியின் ’சமானா’ நாளிதழில் பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று அதனைப் பாராட்டும் விதமாக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கேரேயின் உதவியாளரும் இதனைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனால், நாங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து விலகுகிறோம். இது தொடர்பாக நான் எங்கள் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பேசுகிறேன்.
மகா அகாடி கூட்டணியினர் இவ்வாறு பேசுகையில், பாஜகவுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நாங்கள் எதனால் அவர்களுடன் கூட்டணியில் இருக்கவேண்டும்.
சமாஜ்வாதி கட்சி வகுப்புவாத சித்தாந்தவாதிகளுடன் இயங்க முடியாது. எனவே, நாங்கள் இந்தக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சிக்கு இரு எம்எல்ஏக்கள் உள்ளனர். இன்று மகா விகாஸ் அகாடி கூட்டணியினர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். ஆனால், சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் அபு அஸ்மி மற்றும் கட்சித் உறுப்பினர் ரைஸ் ஷேக் புறக்கணிப்பை மீறி பதவியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.