
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
இந்தநிலையில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி இன்று போராட்டம் நடத்தினர். இதனால் இன்று அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
அம்பேத்கரையும் அரசியலமைப்பையும் அமித் ஷா அவமதித்துள்ளார். இதன் மூலமாக மனுஸ்மிருதி, ஆர்எஸ்எஸ் பற்றிய அவரது சித்தாந்தம், அம்பேத்கரின் அரசியலமைப்பை மதிக்க விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இதற்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
நேற்று அமித் ஷா பேசும்போது, நான் பேசுவதற்கு அவையில் அனுமதி கேட்டு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அமைதியாக இருந்தோம். அமித் ஷா பேசியதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.