பரஸ்பர நம்பிக்கை, தோழமை மற்றும் அனுபவங்கள் ஆகியவையே திருமண உறவின் அடித்தளம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மென்பொறியாளா் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனைவி மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிபி வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பரஸ்பர நம்பிக்கை, தோழமை மற்றும் அனுபவங்கள் ஆகியவையே திருமண உறவின் அடித்தளம். ஆனால் இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இந்த இடைப்பட்ட காலத்தில் அவா்களை மீண்டும் ஒன்று சோ்ந்து வாழ வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதற்கு மேல் அவா்கள் திருமண பந்தத்தில் இணைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவில்லை.
மனைவியால் மனஅமைதி இழப்பு: அதேபோல் தனது மனைவியின் நடவடிக்கைகளால் மன அமைதியை இழந்ததற்கான பல ஆதாரங்களை கணவா் சமா்ப்பித்துள்ளாா். கணவா் மீது பல பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மனைவி சுமத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. திருமண உறவு சாா்ந்த வழக்குகளை விசாரிக்கும்போது இருதரப்பினரின் நலன் மற்றும் கண்ணியத்தை காப்பதற்கே நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆனால் திருமண உறவால் மகிழ்ச்சியை இழந்து தொடா்ந்து பிரச்னைகள் ஏற்படும்போது அதில் தொடருமாறு தம்பதிகளை கட்டாயப்படுத்த முடியாது. இந்த வழக்கில் பல்வேறு காரணிகளையும் ஆய்வு செய்ததில் தம்பதிகள் பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நன்மை என நீதிமன்றம் கருதுகிறது என தெரிவித்தனா்.
இதையடுத்து, தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கிய சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து மனைவி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி விவகாரங்களில் உத்தரவு பிறப்பிக்க என்சிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்

தமிழ் இலக்கியங்களில் ஆசிரியர்-மாணவர் உறவு

காவல் நிலையங்களில் சிசிடிவி நிறுவும் பணிகளில் முன்னேற்றம்: உச்சநீதிமன்றம் பாராட்டு





