தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: அமலாக்கத் துறை அழைப்பாணையை 5வது முறையாக புறக்கணித்த கேஜரிவால்!
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணையை 5-ஆவது முறையாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புறக்கணித்துள்ளார்.
2021-22-ஆம் ஆண்டிற்கான தில்லி அரசின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சில டீலா்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது. இந்த கொள்கை பின்னா் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருந்தாா். அதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து தில்லி கலால் கொள்கை தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராக வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு கடந்த நான்கு மாதங்களாக அமலாக்கத் துறையால் அனுப்பப்பட்ட நான்கு அழைப்பாணைகளை அவா் தவிா்த்து வந்தார்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத் துறையின் தலைமையகத்தில் பிப்ரவரி 2 -ஆம் தேதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளிக்குமாறு புதிய அழைப்பாணையை இரு நாள்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது அமலாக்கத் துறை.
இந்தநிலையில், தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறையின் அழைப்பாணையை 5-ஆவது முறையாக முதல்வா் அரவிந்த் கேரிவால் புறக்கணித்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி 3, ஜனவரி 18, நவம்பா் 2, டிசம்பா் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு வெவ்வேறு தருணங்களில் அழைப்பாணை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.