தில்லியில் பணிபுரியும் 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த மாதம் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், கும்லா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ராகுல் காந்தி பேசியது:
“பிரதமர் நரேந்திர மோடி அவரை ஓபிசி பிரிவைச் சார்ந்தவர் என்று கூறுகிறார். அதேசமயம், நாட்டில் ஏழை மற்றும் பணக்காரர் என்ற இரண்டு சாதி மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். நாட்டில் 50 சதவிகிதம் பேர் ஓபிசி பிரிவினர். 15 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட சமூகத்தையும், 8 சதவிகிதம் பழங்குடி சமூகத்தையும் சார்ந்தவர்கள். சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம். அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்னதாக, அவர்களை கணக்கிடுவது மிக முக்கியம்.
தில்லியில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களை கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் காண முடியாது. நாட்டில் உள்ள 100 முன்னணி பன்னாட்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஒருவர்கூட ஓபிசி பிரிவைச் சார்ந்தவர் இல்லை. அதானி, டாடா, பிர்லா போன்ற பெயர்கள் மட்டுமே கேட்டிருப்போம்.” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமாரை தவிர மம்தா உள்பட அனைவரும் தொடர்வதாகவும், பிகாரில் இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.