ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல்வர் சம்பயி சோரன் உத்தரவு
ராஞ்சி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பிகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அந்த மாநில முதல்வர் சம்பயி சோரன் உத்தரவிட்டுள்ளார். பிகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதே அளவு காலம் தேவைப்படும் எனவும், அதே மாதிரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் உள்ள பேரவை உறுப்பினர்களும் பேரவையில் கோரிக்கை எழுப்பி வந்தது.
இந்த நிலையில், பிகார் மற்றும் ஆந்திரத்துக்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் சம்பயி சோரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் சம்பயி சோரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவா்களுக்கு அதிக பங்கு. தயாராகிறது ஜாா்க்கண்ட் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடா்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை தயாரிக்க பணியாளா் நலத்துறைக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். விரைவில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அண்டை மாநிலமான பிகாரில் மேற்கொள்ளப்பட்ட அதே முறையில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜாா்க்கண்டிலும் அதே அளவு காலம் தேவைப்படும். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், மக்களவைத் தோ்தலுக்கு பின், கணக்கெடுப்புக்கான பணி தொடங்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் அலுவல் மொழித் துறை ஆகியவை ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்ட விதிகளின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலம் மற்றும் வருவாய் மற்றும் நில சீர்திருத்தத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிர்வாக விதிகளில் எந்த துறைக்கும் ஒதுக்கப்படவில்லை. எனவே, சம்பயி சோரன் அரசு, கணக்கெடுப்பு நடத்துவதற்காக பணியாளர் துறையை இறுதி செய்துள்ளது.
எவ்வாறாயினும், கணக்கெடுப்பு நடத்துவதற்கான கால அளவு இன்னும் தெளிவாக கூறப்படவில்லை. பணியாளர் துறை இதற்கு அதிகம் தாமதிக்காது. இருப்பினும் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலுக்கு முன் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்படலாம் என நம்பப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜார்கண்டில் தனது ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்’ போது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சியான இந்தியக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் என்ற உச்சரம்பு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.