அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 2004 முதல் 2019 வரை உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், 2019-ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இருப்பினும், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.
இந்த நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
“அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தேர்தல் குழுவும், ராகுல் காந்தியும் தான் முடிவெடுப்பார்கள். ஆனால், அமேதி மக்கள் ராகுல் காந்தி மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
2019-இல் தவறு செய்துவிட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஸ்மிரிதி இரானி சவால் விடுவது அவரது ஜனநாயக உரிமை, நாங்கள் சவாலுக்கு அஞ்சி ஓடவில்லை. ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவார் என்று மக்கள் கூறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராஜீவ் காந்தி 4 முறையும், சோனியா காந்தி ஒரு முறையும் மக்களவைக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.