

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசிடம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூடப் பணமில்லை என பாஜக மாநிலத் தலைவர் பி.ஓய்.விஜயேந்திரர் குற்றம் சாட்டியுள்ளார்.
மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயேந்திரர்,
நான் வாக்குறுதிகளுக்கு எதிரானவன் அல்ல. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவர்களின் கடமை. ஆனால் வளர்ச்சி அடிவாங்கியுள்ளது. மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காத அவல நிலை உள்ளது. கோயில்களை அரசே கொள்ளையடிக்கும் நிலை இவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுபோன்ற சூழல் நிலவுவது துரதிருஷ்டவசமானது. இதற்கு முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். நாட்டிலேயே பணக்கார மாநிலமாகக் கருதப்படும் கர்நாடகத்தில் அதிக வரியும் செலுத்தப்படுகிறது. தற்போது இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
கர்நாடகத்தில் 9 மாத ஆட்சியில் 1.25 கோடி குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா கூறுகிறார். காங்கிரஸும், முதல்வர் சித்தராமையாவும் எந்த மாயையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்களவை தேர்தலுக்குப் பயந்து நேரத்தை வீணடிக்கவே மத்திய அரசுக்கு எதிராக "தில்லி சலோ" போராட்டத்தை நடத்தினர். முதல்வர் மற்றும் காங்கிரஸ் அரசும் ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.