மும்பை (மகாராஷ்டிரம்): மக்களவை முன்னாள் தலைவரும், மகாராஷ்டிரம் மாநில முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி, மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலமானார்.
86 வயதான ஜோஷிக்கு கடந்த புதன்கிழமை (பிப். 21) திடீரென் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.
ஜோஷி உடல் முழு அரசு மரியாதையுடன் தாதர் சிவாஜி பார்க் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராய்கட் மாவட்டம் நந்தவி கிராமத்தில் 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்த ஜோஷி, 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிரம் முதல்வராகவும், 2002 முதல் 2004 வரை மக்களவை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2006 முதல் 2012 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1999 முதல் 2002 வரை கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.