பழைய காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றும் வகையிலும், நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலும், மத்திய அரசு மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை உருவாக்கியுள்ளது.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சம்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதிநியம்’ ஆகிய 3 குற்றவியல் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
அந்த மசோதாக்களுக்கு கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டமாகின.
அதேநேரம், இந்தப் புதிய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக சில வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களில் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குழுவாக சேர்ந்து அடித்து கொலை செய்தல், குழந்தைகள் மீதான கூட்டு பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.