காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ’இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தை’ மணிப்பூரில் தொடங்கி மேகாலயா, அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் வழியாக தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி நேற்று (பிப்.24) இணைந்தார்.
முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ்-சமாஜவாதி இடையே அண்மையில் தொகுதிப் பங்கீடு உறுதியானது. நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜவாதி மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று(பிப்.25) அலிகாரிலிருந்து தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று, ஆக்ராவில் ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று(பிப்.25) பங்கேற்றார்.