மாரடைப்பு காரணமாக கர்நாடக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜா வெங்கடப்ப நாயக் காலமானார்.
கர்நாடக மாநிலம், ஷோரபுர் தொகுதி எம்எல்ஏ ராஜா வெங்கடப்ப நாயக்(64). இவர் மாரடைப்பு காரணமாக பழைய விமான நிலைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் சமீபத்தில் கர்நாடக மாநில கிடங்கு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
முதல்வர் சித்தராமையா மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜா வெங்கடப்ப நாயக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், மூன்று நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். மக்கள் மத்தியில் பிரபலமான ஆளுமை ராஜா வெங்கடப்ப நாயக்கின் மறைவு தனிப்பட்ட முறையில் மற்றும் மாநில அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
பிரிந்த ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் வேதனையைத் தாங்கும் சக்தியைப் பெறவும் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாயக்கை எனக்கு நன்றாக தெரியும். அவர் (நாயக்) எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பார். மேலும் அனைவரையும் அழைத்துச் சென்று பணியாற்றுவார் என்று அவர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.