கர்நாடகத்தில் காலியாகவுள்ள 4 மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகின்றது. காங்கிரஸின் 3 வேட்பாளர்கள், பாஜக மற்றும் மஜதவின் தலா ஒரு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
224 போ் கொண்ட பேரவையில் ஆளும் காங்கிரஸுக்கு 135 இடங்கள், பாஜகவுக்கு 66, மஜதவுக்கு 19 இடங்கள் உள்ளன. வெங்கடப்பா நாயக் இறந்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் பலம் 134-ஆகக் குறைந்துள்ளது.
ஒரு மாநிலங்களவை பதவிக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸின் 3-வது வேட்பாளர் வெற்றி பெற சுயேச்சை அல்லது மாற்றி கட்சியினரின் வாக்கு தேவை.
சிறிய கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்களான ஜனாா்தனரெட்டி, தா்ஷன்புட்டனையா, சுயேச்சைகளான லதா மல்லிகாா்ஜுன், கே.எச்.புட்டசாமி கௌடா ஆகியோா் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, மஜத வேட்பாளர் டி.குபேந்திரரெட்டி வெற்றி பெற அக்கட்சியின் 19 வாக்குகளுடன் பாஜகவின் 21 வாக்குகள் கிடைத்தால் மொத்தம் 40 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 போ் கட்சிமாறி வாக்களித்தால் மட்டுமே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஜனாா்தனரெட்டி, மோடியை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் வாக்களித்த பிறகு வெளியேறிய ஜனாா்தனரெட்டி, “எனது மனசாட்சியின்படி வாக்களித்துள்ளேன். யாருக்கு வாக்களித்தேன் என்பதை கூறமுடியாது. பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சற்றுநேரத்தில் கர்நாடகத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் போது, 4-வது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கைப்பற்றப்போவது யார் எனத் தெரியவரும்.